கவிதை: காதலி – மகாகவி பாரதியார்

காலைப் பொழுதிலொரு மேடை மிசையே

            வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;

மூலைக் கடலினை அவ்வான வளையம்

            முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;

நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி

            நேரங் கழிவதிலும் நினைப் பின்றியே

சாலப் பலபல நற் பகற்கனவில்

            தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன்.


ஆங்கப் பொழுதிலென் பின் புறத்திலே,

            ஆள்வந்து நின்றேனது கண் மறைக்கவே,

பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,

            பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்.

ஓங்கிவரும் உவகை உற்றி லறிந்தேன்;

            ஒட்டுமி ரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;

“வாங்கி விடடி ஊகை யேயேடி கண்ணம்மா!

            மாய மெவரிடத்தில்?” என்று மொழிந்தேன்.


சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே

            திருமித் தழுவி “என்ன செய்தி சொல்” என்றேன்;

“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?

            நீல விசும்பிணிடை என்ன கண்டிட்டாய்?

திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?

            சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?

பிரிந்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே

            பெற்ற நலங்கள் என்ன? பேசுதி” என்றாள்


நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;

            நீல விசும்பிணிடை நின்முகங் கண்டேன்;

திரிந்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

            சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;

பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே

            பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை,

சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே,

            திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்;

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *