சிறுகதை: அப்புசாமி செய்த கிட்னி தானம் – பாக்கியம் ராமசாமி

படிக்கவேண்டிய முக்கிய குறிப்பு

மனித உடம்பில் இரண்டு சிறுநீரகங்கள் உள்ளன. சிலர் ஒரே ஒரு சிறுநீரகத்துடன் பிறப்பதுண்டு. ஒரு சிறு நீரகத்தை ஆபரேஷன் செய்து எடுத்துவிட்டாலும் மற்றதைக் கொண்டு வாழமுடியும்.

சிறுநீரகங்கள் முதுகெலும்பின் பக்கத்துக்கு ஒன்றாக இடுப்பில் இருக்கும் பெரிய சுரப்பிகளாகும். இவை பெரிய மொசைக்கொட்டை போன்ற உருவமுடையன.

– கலைக்களஞ்சியம்

“சீதே!” அப்புசாமி  பல்லை நறநறத்தார். “நீ என்னை ரொம்பக் கேவலப்படுத்தரே! ஒவ்வொருத்தனும் தாஜ்மகால் கட்டினான். நான் கேவலம் ஒரு பாத்ரூம் கட்ட ஆசைப்படறேன்… அதுக்கு வக்கில்லையா எனக்கு?”

“நத்திங் டூயிங்!” என்று இரண்டு வார்த்தைகளோடு சீதாப்பாட்டியின் பதில் அமைந்திருந்தால் பரவாயில்லை. அப்புசாமிக்கு இனிமேல் அவுட் ஹவுஸிலுள்ள பாத்ரூம்தான் என்று உத்தரவு போட்டு விட்டாள்.

“சீதே! என்னை அழுக்குப் பக்கெட்டைத் தூக்கிட்டு மலேரியாக் கொசுவுக்கு எண்ணெய் அடிக்கிறவன் மாதிரி அவுட் ஹவுஸ் பக்கம் காலையிலே காலையிலே போகச் சொல்றியா? முடியாது: பாத்ரூம் என் பிறப்புரிமை!” என்று வாதாடிப் பார்த்தார்.

சீதாப்பாட்டி வீட்டு பாத்ரூமுக்கு ஒரு பேட்லாக் அடித்து பூட்டு சாவி போட்டுச் சாவியைத் தன்னிடம் வைத்துக் கொண்டு விட்டாள்.

அப்புசாமி தன் விதியை நொந்து கொண்டார்.

ஒரு வாரத்துக்கு முன் நடந்த ஒரு சம்பவம். அப்புசாமிக்கு எவ்வப்பொழுதெல்லாம் பற்றாக்குறை  ஏற்படுகிறதோ அவ்வப்பொழுதெல்லாம் அவர் பார்வை சீதாப்பாட்டியின் அலமாரியிலுள்ள பழைய நியூஸ் பேப்பர் பக்கம் பாயும். பழைய பேப்பர் கடைக்குப் போடுவதற்காக அவர் சில பல பத்திரிகைகளைத்  திரட்டிய (திருடிய?)  போது ஒரு சின்ன மருத்துவ வெளியீடு அவர் கண்ணில்பட்டது. தமிழில் இருந்ததால் தண்ணிப்பட்ட பாடாக அதைப் படித்துவிட்டார். அதிலிருந்து ஒரு ஆரோக்கிய ரகசியக் குறிப்பு அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதிலிருந்த குறிப்பு: இருதயத்துக்கு எவ்வளவுக்கெவ்வளவு சிரமம் கொடுக்காமல் இருக்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது நீடித்து வேலை செய்யும். சில பேர் பாத்ரூம் போகும் போது சிரமப்படுத்திக் கொள்வார்கள். அதுகூட இதயத்தைப் பாதிக்கும். அப்படிப்பட்டவர்கள் பாத்ரூமில் பத்திரிகை படித்தால் அவ்வளவு சிரமம் இருக்காது.

மறுநாளிலிருந்து அப்புசாமி பாத்ரூமிலேயே பேப்பரும் கையுமாகத் தன் வாழ்நாளில் பெரும் பகுதியைக் கழிக்க ஆரம்பித்தார். ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற பொன்மொழியை அவர் உதாசீனப்படுத்தின விதம் சீதாப்பாட்டிக்குப் பெருத்த பிரசினையை உண்டாக்கியது. லாக் அவுட் செய்துவிட்டாள்.

அவுட் ஹவுஸ் பாத்ரூம்தான் அவருக்கு என்று சொல்லி விட்டாள். ஹம்ப்பி மொகஞ்சதாரோக்காரர்கள் ஆராய வேண்டிய ஓர் இடம் அவுட் ஹவுஸ் பாத்ரூம்.

வசதியான தனி பாத்ரூம் கட்டப் போராட்டம் நடத்தினார். சீதாப்பாட்டி மசியவில்லை.

படித்துக்கொண்டிருந்த செய்திப் பத்திரிகையை வெறுப்புடன் விட்டெறிந்தார் அப்புசாமி. விஸ்வாமித்திரர் முன் மேனகா சாகசத்தோடு விழுந்த மாதிரி பேப்பர் ஒரு தினுசாக ஒய்யாரமாக மடங்கி விழுந்தது. அதிலிருந்த ஒரு விளம்பரம் அப்புசாமியின் கண்ணில் பட்டது.

ரூபாய் 2,000 உங்களுக்குத் தேவையா?

புண்ணியகோடி என்ற 45 வயது மில் அதிபர் ஒருத்தர் சிறுநீரகக் கோளாறால் படுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு யாரேனும் மனமுவந்து ஒரு சிறுநீரகம் (கிட்னி) தானம் செய்ய முன் வருவார்களேயானால் அவர் தயாராயிருக்கிறார்.

அப்புசாமி யோசித்தார்.

சிறுநீரகத் தானம்… ரூபாய் இரண்டாயிரம்…

அப்புசாமிக்கு பாத்ரூம் கட்டும் விஷயமாக உடனடியாக இரண்டாயிரம் வேண்டியிருந்தது. ஆகவே தன் நண்பர்களுடன் அவசரமாக ஒரு கிட்னி மாநாடு கூட்டித் தன் சந்தேகங்களையெல்லாம் அலசினார். ரசகுண்டு தனக்குத் தெரிந்த ஒரு டாக்டரிடம் கேட்டு வந்து தாத்தாவுக்கு சில ‘இன்ஸைட் இன்பர்மேஷன்’ தந்தான்… அதன் விவரமாவது:

ஒரு சட்னிக்கு இரண்டு இட்லி எப்படி உண்டோ அதுமாதிரி ஒரு மனிதனுக்கு இரண்டு கிட்னி அதாவது சிறுநீரகப் பை இரண்டு உண்டு.

எப்படி சட்னிக்கு ஒரு இட்லி இருந்தாலும் போதுமோ அது போல மனிதனுக்கு ஒரு கிட்னி இருந்தாலும் போதும்.

புண்ணியக்கோடி (வயது 45) கடகடவென்று அவரது மில்லைப் போலச் சிரித்தார். ‘படுத்த படுக்கையிலிருந்தாலும்’ சிரிப்புக்கொன்ணும் குறைச்சலில்லை’ என்று அப்புசாமி எண்ணிக்கொண்டார்.

“விளம்பரத்தைப் பார்த்துட்டு வந்தியா? ஓய்! பெரியவரே! நீங்களா எனக்கு கிட்னி தானம் பண்ண வந்தீங்க?”

அப்புசாமிக்கு ரோஷமாக வந்தது.

சில பேரிடம் பேசிப் புரியவைப்பதைக் காட்டிலும் காரியமாகச் செய்து காட்டுவது மேல் என்று அப்புசாமிக்குத் தோன்றியது, அடுத்த நிமிடம், “ஐஸலகும்மா!” என்று வாயில் விரலை வைத்து ஒரு விஸில் அடித்தவாறு சக்கர பல்டி ஒன்று போட்டார். அடுத்த நிமிடம் இன்னொரு முதுகு அந்தர் அடித்துத் தொபுகடீரென்று புண்ணியகோடியின் அருகே படுக்கையில் போய் அமர்ந்தார்.

அசந்து போய்விட்டார் புண்ணியகோடி.

“உங்க கிட்னி கிடைக்கறதுக்கு நான் என்ன பாக்கியம் பண்ணியிருக்கணுமோ? கொஞ்சம் ரேட்டை முன்னே பின்னே போட்டுக்கிட்டீங்கனா ரெண்டு கிட்னியுமா வேணும்னாலும் எடுத்துக்கறேன்!” என்றார் அந்த பிஸினஸ்காரர்.

அப்புசாமி, “ஒண்ணுதான் தரமுடியும். சீக்கிரம் எடுத்துக்கிட்டு ரூபாயைக் கொடுங்க!” என்று ஆர்வத்துடன் அவசரபடுத்தினார்.

அப்புறம்தான் கிட்னி என்கிற சமாசாரம் கிரிணிப் பழ வியாபார மாதிரியல்ல ஆபரேஷன் பண்ணி வயிற்றுக்குள்ளிருந்து எடுக்க வேண்டியது என்பதும் அதற்கு ஏகப்பட்ட ஏற்பாடுகள் இருக்கிறது என்பதும் அவருக்கு ஞாபகம் வந்தது.

“நாளைக்கே நர்ஸிங்ஹோமுக்கு வந்திடறேன்… நம்ப சரக்கு கியாரண்டியான சரக்கு நைனா,” என்று ஜம்பமாகச் சொல்லிக் கொண்டு மாடியிறங்கி முன் ஹாலுக்கு வந்தார்.

அவர் பிடரியில் யாரோ பளார் என்று ஓர் அறைவிட்ட மாதிரி இருந்தது, ‘பட்டப்பகலில் கூட இப்படி ஒரு எக்ஸார்ஸிஸ்ட் பேயா?’ என்று திரும்பிப் பார்த்தார்.

இரண்டு முரட்டுப் பேர்வழிகள்.

“யோவ், பாம்புக்கு நீ பால் வார்க்கறே, தெரியுமா சேதி? நீ கிட்னி தானமா பண்ணவந்தே? உன்னை சட்னி பண்ணிடுவோம்… கபர்தார்!”

அந்த ஆள் அப்புசாமியின் வாயை அடைத்துக்கொண்டு அவர் கையை சேவை மிஷின் மாதிரி முருக்கியதும் அப்புசாமிக்கு உயிரே போவது போலிருந்தது.

அப்புறம்தான் அவருக்கு மெதுவே விஷயம் தெரிந்தது.

தங்கள் எஜமானைப்பற்றி அந்த வீட்டு வேலைக்காரர்களுக்காகட்டும், மில் தொழிலாளிகளுக்காகட்டும் நல்ல அபிப்பிராயம் இல்லையாம். ரொம்பக் கொடுமைக்காரராம் அந்த ஆள். ஆகவே அவருக்கு கிட்னி யாரும் தானம் கொடுத்துவிடாதபடி அவர்கள் சாமர்த்தியமாகத் தடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். அவர்களையும் மீறி எஜமானர் பத்திரிகை விளம்பரம் தந்துவிட்டாராம்.

அப்புசாமியின் எதிரிலிருந்த ஆள், சுண்ணாம்புக் கரண்டானிலிருந்து சுண்ணாம்பு சுரண்ட ஒரு பெரிய பிச்சுவாவை எடுத்தான். அப்புசாமிக்கு நடுங்கியது.

“உனக்கு உசிர் வேணும்னா அவனுக்கு தராதே. இல்லியனா ஒரே சதக்!”

பாத்ரூம் கட்டும் ஆசையை அந்தக்கணமே விட்டுவிட்டு, புண்ணியகோடியிடம் ஓடினார் அப்புசாமி.

“உன் கிட்னி எனக்குக் கட்டாயம் தேவை. பத்தாயிரம்னாலும் தர்ரேன். அந்தக் கழுதைங்க பேச்சைக் கேட்டுட்டு நீ தர மறுத்தியானால் இதோ பாத்தியா?” தலையணைக்கடியிலிருந்து ரிவால்வரை எடுத்தார் புண்ணியகோடி. 

“ஐயோ! ஐயோ! இருதலைக்கொள்ளி எறும்புதான் கேள்விப்பட்டிருக்கிறேன்… இரு கிட்னி  எறும்பா இருக்கிறேனே!” என்று அலறினார் அப்புசாமி. நண்பர்களைச் சரண் புகுந்தார்.

“அம்மாடி! அடேய் ரசம்! நீ வெறும் ரசம் இல்லைடா… கொத்துமல்லி போட்ட பெங்களூர் தக்காளி ரசம்!” என்று அவனைக் கட்டிக் கொண்டார் அப்புசாமி. அவனுடைய உச்சந் தலையில் சில பல முத்தங்களைகூட வழங்கினார். “எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நான் மூளை இல்லாமலே பிறக்கவேண்டும். நீயே என் மூளையாக இருக்கணும்டா…”

மலைபோல் அவருக்கு வந்த பிரசினையை ரசகுண்டு ஒரு யோசனை சொல்லி நொடியில் தீர்த்துவிட்டான்.

ரசகுண்டுவுக்கு ஒரு டாக்டரைத் தெரியும். வால்போல பல பட்டங்கள் கொண்டவர்.

ரசகுண்டு அங்கேயும் இங்கேயும் பீறாய்ந்து ஒரு நூறு ரூபாய் திரட்டிக்கொண்டு அப்புசாமியை அவரிடம் கூட்டிச்சென்று அவருக்கு ஒரு சர்டிபிகேட் வாங்கித் தந்துவிட்டான்.

சர்டிபிகேட் என்றால் வெறும் ஒப்புசப்பு சர்டிபிகேட் இல்லை. அப்புசாமியின் புகைப்படம் ஒட்டிய ஆணித்தரமான சர்டிபிகேட். அந்த சர்டிபிகேட்டிலிருந்த வாசகமாவது:

“அப்புசாமி என்ற இந்த மனிதருக்கு கிட்னி என்பதே கிடையாது. இவர் ஓர் அதிசயப் பிறவி. கிட்னி இல்லாமலே இவர் இயங்கி வருகிறார்”.

அப்புசாமி மில் சொந்தக்காரரிடம் அந்த சர்டிபிகேட்டைக் கொண்டு போய்க் காட்டினார். அவருக்கு ‘சே!’ என்று ஆகிவிட்டது. அவருடைய எதிரிகளுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.

தந்திரம் பலித்தது. விடுதலை! விடுதலை! விடுதலை!

அந்த மகிழ்ச்சி இரண்டு நாளைக்குள் எதிர்பாராத ஒரு திருப்புமுனையைத் தரும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

இரண்டு நாட்கள் கழித்து அவருக்குப் பிடித்தமான தமிழ்ப் பத்திரிகையைத் தூக்கிக் கொண்டு ரசகுண்டு மூச்சிரைக்க ஓடி வந்தான், “தாத்தா! தாத்தா! உங்க போட்டோ பத்திரிகையில் வந்திருக்குது!”

அப்புசாமி “டேய்! நான் இன்னும் செத்துப் போகலையேடா.. அதுக்குள்ளேயா வந்துட்டுது?” என்றவாறு பத்திரிகையை வாங்கி பார்த்தார்.

அதிசய மனிதர்! மருத்துவர்கள் தேடுகிறார்கள்! இந்த அதிசய மனிதரை எங்கேயாவது பார்த்தால் உடனே பிடித்துக் கொண்டு வந்து ஜி. ஹெச்சில் ஒப்படையுங்கள். அல்லது தகவல் கொடுங்கள். தகுந்த சன்மானம் உண்டு. – மருத்துவப் பிரிவு.

“என்னடா ரசம்! கிணறு வெட்டப் பூதம் கிளம்பின மாதிரி ஆயிட்டுது!” என்றார். “நான் என்ன திருவான்மியூர் பாங்க் கொள்ளைக்காரனா? இல்லாட்டி லைசென்ஸ் இல்லாத நாயா? என்னை எதுக்குப் பிடிச்சுத் தரணும்?”

“தாத்தா! உங்களை டாக்டர்களெல்லாம் பரிசோதனை பண்ண விரும்பறாங்க போலிருக்கு. உங்களுக்குக் கஷ்டமே இல்லை. ஜாலியா வேளா வேளைக்கு ராஜோபசாரம் பண்ணுவாங்க. கும்பல் கும்பலாக கியூ வரிசையிலே வந்து ஜனங்க பார்ப்பாங்க. அமெரிக்கா கூட நீங்க போகலாம் தாத்தா.. சான்ஸ் இருக்குது புறப்படுங்க ஜி ஹெச்சுக்கு..”

அப்புசாமிக்குப் பெருமையாயிருந்தது. “டேய் நான் அமெரிக்கா போனா நீதாண்டா கூட வரணும்.”

அப்புசாமியின் வயிற்றைச் சப்பாத்தி மாவு பிசைவது போலக் கும்பலான டாக்டர்கள் உட்கார்ந்து மாறி மாறிப் பிசைந்தார்கள். அப்புசாமி, “என்னங்க டாக்டர்! என் வயிறென்ன பஸ் ஹார்னா? பூம் பூம்னு சின்னப்பசங்க மாதிரி ஆளாளுக்கு அழுத்திப் பார்க்கறீங்க,” என்று ஆட்சேபம் தெரிவித்தார்.

“உஸ்!” என்றார் தலைமை டாக்டர். அவர் முகத்தில் லேசான ஒரு சந்தேகக் குறி, சில நோயாளிகள் ஆஸ்பத்திரியில் சுகமாக இருக்கலாம் என்பதற்கோ அல்லது தனக்கு ஒரு பப்ளிஸிடி வேண்டும் என்பதற்கோ இப்படி அதிசய புருடாக்களை அவ்வப்போது அவிழ்த்துவிடுவது உண்டு என்பது அவர் அனுபவம்.

“ஏய்யா!” என்றார் அப்புசாமியைப் பார்த்து, “நிஜமாகவே உமக்கு கிட்னி இல்லையா?”

அப்புசாமி சிரித்தார். அதே சமயம் ‘ஆசாமி சந்தேகப்படறதைப் பார்த்தால் அமெரிக்கப் பயணம் ஹோகயா போலிருக்கிறதே’ என்று தோன்றி விட்டது.

“நான் சொன்னால் பொய்யாயிருக்கும். எங்க ரசம் நூறு ரூபாய் தண்டம் அழுது டாக்டர் சர்டிபிகேட் வாங்கிக் கொடுத்திருக்கானே… அதுக்கு என்ன அர்த்தம்!” என்றார்.

தலைமை டாக்டரின் மூளையில் ஒரு சிறு பொறி. ‘நூறு ரூபாய் தண்டம் அழுது சர்டிபிகேட்!’

தலைமை டாக்டர் அந்த சர்டிபிகேட்டை இப்போதுதான் நன்றாகப் பார்த்தார்.

டாக்டர் பூர்ணநாத்..

தனது உதவியாளர்களிடம் ஏதோ கூறினார். அவர்கள் உடனே பழைய மருத்துவ கெஜட்டுகளையும் பதிவுப் புத்தகங்களையும் அரை மணி புரட்டினர்.

டாக்டர் பூர்ணநாத் என்ற பெயரில் எந்த டாக்டரும் பதிந்து கொண்டதற்கான சான்றே பதிவேட்டில் இல்லை.

“உங்க டாக்டர், டாக்டரே இல்லை போலிருக்கே!” என்றார் தலைமை டாக்டர்.

அப்புசாமிக்கு அவரை எதிர்த்துப் பேசினால் ஏதாவது இன்னும் விபரீதம் வந்து தொலையப் போகிறது என்று தோன்றிவிட்டது. ஆகவே தடாலென்று கட்சி மாறிவிட்டார்.

“ஹஹ!” என்று சிரித்தார். “டாக்டர் சார்! நீங்க சொன்னது கரெக்ட். எனக்கு அவன் மேலே எப்பவும் சந்தேகம்தான். இவனெல்லாம் ஒரு டாக்டரா இருக்க முடியுமான்னு? நான் இதுக்குன்னே அவனுக்கு ஒரு டெஸ்ட் வைக்கத்தான் போனேன். நான் வரேன் டாக்டர்! என் வேலை முடிஞ்சது!” தப்பினால் போதும் என்று நழுவிவிட்டார்.

ஒரு வாரம் கழித்து..

சீதாப்பாட்டி ஆச்சரியத்துடனும், அதே சமயம் எரிச்சலுடனும், ரிஜிஸ்டர்ட் போஸ்ட் ஃபார்யூ! யார்கிட்டே கடன் வாங்கித் தொலைத்தீர்கள்? ரிஜிஸ்டர் நோட்டீஸ் வந்திருக்கு! ஐ ஆம் நாட் கோயிங் டு ஹெல்ப் யூ! தட் இஸ் டெஃபனிட்!” என்றாள்.

அப்புசாமி ஒருகால் தோழன் ரசகுண்டுவே நூறு ரூபாய்க்காக நோட்டீஸ் விட்டிருப்பானோ என்று பயந்து நடுங்கி ஒருவழியாகக் கையெழுத்துப் போட்டு வாங்கிப் படித்தார்.

இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு செக், அவர் பெயருக்கு! அத்துடன் சுருக்கமான நன்றி அறிவிப்புக் கடிதம்.

மருத்துவத் துறையினர் பரிந்துரைத்த சிபாரிசுப்படி போலீஸ் இலாகாவிலிருந்து அவருக்கு அந்தத் தொகை  வந்திருந்தது.

வாசகம் வருமாறு:

மருத்துவ இலாகாவுக்குக் களங்கம் ஏற்படுத்துவதுபோல நீண்ட நாளாக போலி டாக்டராக இருந்த ஒரு குற்றவாளியைப் பிடித்துக் கொடுக்கத் தாங்கள் உதவியதற்கு எங்கள் நன்றியையும், தாங்கள் மேற்கொண்ட சிரமங்களுக்குச் சிறு அன்பளிப்பாக ரூ.2000’ம் இத்துடன் அனுப்பியுள்ளோம்.

“சீய்தே!” என்றார் அப்புசாமி அலட்சியமாக செக்கை மனைவியின் கண்முன்னே இப்படியும் அப்படியும் ஆட்டியவாறு. “இதை என்ன பண்ணப் போறேன் தெரியுமா? தனியாக ஐயாவுக்கென்று பாத்ரூம்! ஏர் கண்டிஷன்கூடப் பண்ணிக்கப் போறேன்! என் வீடு! என் பாத்ரூம்! என் பேப்பர்! ஹ ஹ! எத்தனை மணி வேண்டுமானாலும் சமாதி மாதிரி உள்ளேயே கிடப்பேன். புரியுதாடி?”

சீதாப்பாட்டி பல்லைக் கடித்துக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *