சிறுகதை: ஸோம்புனாம்புலிஸம் – டைரக்டர் தக்காளி சீனிவாசன்

1

தொழிலதிபர் தன்ராஜ் இறந்து கிடந்தார்! ஆழமானக்  கத்திக் குத்துக்கள், உடலெங்கும் சிவப்புச் சாயத்தைப் பூசியிருந்தது.

இன்ஸ்பெக்டர் மாத்யூஸ் யோசித்தார். “காயம் பலமா இருக்கு. கத்தி எங்கே இருக்கு?” 

இங்கேயே விசாரணையை ஆரம்பித்தார்.

கோவையில் பல தொழில்களை வெற்றிகரமாக நடத்திய தன்ராஜுக்கு வாரிசுகள் யாரும் இல்லை. சொத்து பூராவும் அவரது தங்கை மகன் விகேஷ் குமாருக்குத்தான் என்பது பலரது யூகம்.

கொலை நடந்திருப்பது விகேஷ் வீட்டில்!

தனது எல்லாத் தொழில்களிலிருந்தும் சட்டென முறித்து, தனது கணக்கை செட்டில் செய்யச் சொல்லி, பார்ட்னர் செல்வகுமாரிடம் சொல்லிவிட்டு வந்தவருக்கு இப்படியொரு விபரீதம்.

முதலில் விகேஷ் விசாரிக்கப்பட்டான்.

2

“நேற்று ராத்திரி என்ன நடந்தது விகேஷ்?”

“நான் என் ரூமில் நல்லா தூங்கிட்டேன் சார். இது எப்படி நடந்ததுன்னு புரியலை.” முகம் ஏகமாய் வெளிறிக் கிடந்தது.

“உங்க மாமாவின் அறையிலிருந்து ஏதாவது சப்தம் கேட்டதா?”

“எனக்கு உடம்பு சரியில்லை. மாத்திரையைச் சாப்பிட்டுட்டு தூங்கிட்டேன்.”

“யாரையாவது சந்தேகப்படறீங்களா?”

“நேற்று காலையில் என் அங்கிளுக்கும் பார்ட்னர் செல்வகுமாருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. அந்த அறைக்குப் பக்கத்து அறையில்தான் டாக்டர் என்னை சோதிச்சு பார்த்துக்கிட்டிருந்தார்.”

“நீங்க அதைப் பற்றி உங்க அங்கிளிடம்..”

“கேட்கவில்லை சார்” கைகள் லேசாய் நடுங்குவதை மாத்யூஸ் கவனித்தார். “சரி. நீங்க போகலாம்.”

விட்டால் போதும் என்று ஓடும்போது மறுபடியும் கூப்பிட்டார்.

“நீங்க என்ன செய்றீங்க?”

“சும்மாத்தான் இருக்கேன். செய்து வந்த பிசினெஸ் நலிஞ்சு போச்சு.”

“செல்வகுமாரை அனுப்புங்க.”

3

செல்வகுமாரை நிறுத்திவிட்டு சப்-இன்ஸ்பெக்டர் மோ.கி. நுழைந்து ராயலாய் சல்யூட் அடித்தார்.

“கோவையிலிருந்து போன் மூலமாகவே விசாரிச்சுட்டேன் சார். தன்ராஜ் வியாபாரத்திலிருந்து விலகுவதை செல்வகுமார் விரும்பலைன்னு தோணுது.”

“ஆள் எப்படி?”

“கொஞ்சம் மர்மமான மனுஷன் தான்.”

“மத்த ஏற்பாடெல்லாம்?”

“பாடியை போஸ்ட் மார்ட்டம் செய்ய வேன் ரெடி. கைரேகை நிபுணர் மேனனும் வந்தாச்சு. டாக் ஸ்க்வாடும் வேலையில் இறங்கிட்டாங்க.”

“முதலில் அந்த கத்தியைக் கண்டு பிடிக்கணும். செல்வகுமாரை அனுப்பிவையுங்க.”

4

“வணக்கம் சார்.”

“வணக்கம். காலையிலிருந்து என்ன நடந்தது?”

“தன்ராஜ் வியாபாரத்தை விடறதை நான் விரும்பலை சார். நேத்து பூரா சண்டைதான் நடந்தது. கம்பெனி பணத்தை நான் அப்படி இப்படி யூஸ் பண்ணிட்டேன். திடீர்ன்னு செட்டில் பண்ணுன்னா என்ன பண்ண முடியும்?

முதலில் தனது சொத்து பூராவையும் விகேஷுக்கு எழுதறதா இருந்தாரு. ஆனா,  அவனுடைய பொறுப்பின்மையைப் பார்த்துட்டு திட்டி, ‘சல்லிக்காசு’ கிடையாதுன்னுட்டாரு.”

“ஆனா சொத்து பூராவும் அவன் பேருக்குத்தான் எழுதி ரிஜிஸ்டர் செய்திருக்காரு.”

“அது தெரியாமல், கொன்னுட்டானோ என்னமோ?”

திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் ஓடி வந்தார்.

“சார் கத்தி கிடைச்சாச்சு. விகேஷின் பெட்டுக்கடியில் இருந்தது.”

5

விகேஷ் கைது செய்யப்பட்டான்.

“எப்படிடா கத்தி உன் படுக்கைக்கு கீழே போச்சு?”

“சத்தியமா தெரியாது சார்.”

“உன் கை ரேகைதானேடா அதுலே பதிவாகியிருக்கு?”

“புரியலை சார்.”

“ஒப்புக்கிட்டா, தண்டனை குறையும்.”

“நிஜமா, நான் செய்யலை சார்.”

நள்ளிரவுக்குத்தான் வீடு திரும்பினார் மாத்யூஸ். எவ்வளவு மிரட்டியும் விகேஷ் ஒப்புக்கொள்ளவேயில்லை. அயர்ந்து தூங்கும்போது டெலிபோன் அலறியது.

“சார். நான் கான்ஸ்டபிள் கோவிந்தன்.”

“என்ன?”

“உடனே ஸ்டேஷனுக்கு வந்து லாக்கப்பில் இருக்கும் விகேஷை வந்து பாருங்க சார்.”

அலறியடித்துக்கொண்டு ஓடினார்.

6

அடுத்த நாள்.

விகேஷின் வீட்டில் அவனது மனைவி யாஷா இருந்தாள். சோர்ந்து காணப்பட்டாள்.

“மிஸஸ் யாஷா! நான் விகேஷின் அறையைச் சோதிக்க வேணும். சர்ச் வாரண்ட் இல்லை.”

“அதனாலென்ன! பார்த்துக்கங்க.”

விகேஷின் அறை படுசுத்தமாக இருந்தது. கம்ப்யூட்டர் கண்ணில் பட்டது. “யாஷா! டீ கிடைக்குமா?”

“இதோ” அவள் போனதும், கம்ப்யூட்டரில் சேமிக்கப்பட்ட ஃபைலிலிருந்து விகேஷின் ஃபைலை, திரையில் ஓடவிட்டார் மாத்யூஸ்.

விவரங்களை பிரிண்ட் எடுத்துக் கொண்டார்.

7

சப்-இன்ஸ்பெக்டர் ஓடிவந்தார்.

“சார்! செல்வகுமார், தனராஜைத் தீர்த்துக்கட்ட ஒரு ரவுடியை ஏற்பாடு செய்திருக்கிறான்.”

“ஆனா கொலை செய்தது விகேஷ்தானே?” 

“சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது, அப்படித்தான் சார் தோணுது. எப்.ஐ.ஆர் போட்டு ரிமாண்ட் பண்ணிடலாமா?”

“கொஞ்சம் பொறுங்க. நான் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய ஆள் அனுப்பியிருக்கேன்.” என்று சொல்லும்போதே டெலிபோன் அலறியது.

“மிஸ்டர் மத்தியூஸ்?”

“யெஸ்.”

“உங்க யூகம் சரி. பேச்சை டேப் செய்துட்டோம்.”

“மோ.கி. குற்றவாளிகளைப் பிடிச்சுட்டேன். விகேஷை விடுதலை செய்ங்க.”

8

“விகேஷுக்குத் தூக்கத்தில் நடக்கும் ‘ஸோம்புனாம்புலிஸம்’ வியாதி உண்டு. அந்தச் சமயத்தில் கையில் கிடைக்கும் பொருளைத் தன்னையறியாமல் எடுத்துத் தன் பெட்டுக்கடியில் வைத்துக்கொள்வான்.” 

“இதை எப்பப் பார்த்தீங்க?”

“விசாரணைக்குக் கொண்டு வந்த ராத்திரி, வீட்டுக்குப் போன் வந்தது. நான் நேரா இந்தக் காட்சியைப் பார்த்தேன்.”

“அப்ப, தன்ராஜ் உடம்பிலிருந்த கத்தியை, இவன் தன்னையறியாமல் எடுத்து வந்து, தன் படுக்கைக்குக் கீழ்..”

“கரெக்ட்!”

“அப்ப உண்மையான குற்றவாளிகள்?”

“யாஷாவும், டாக்டர் மோகனும்.”

9

“யாஷாவுக்கும் மோகனுக்கும் முறை தவறின உறவு இருந்ததுதான் இந்தக் கொலைக்குக் காரணம். இந்த ‘உறவை’ தன்ராஜ் கண்டு பிடிச்சுட்டாரு. அதனால இந்த ஸோம்புனாம்புலிஸ நோயைச் சாதகமாக்கி தன்ராஜை தீர்த்துக் கட்டியிருக்காங்க.”

“எப்படிக் கண்டுபிடிச்சீங்க?”

“யாஷா, தன் வீட்டுப் போனில் பேசாமல், எதிரில் இருந்த பூத்துக்குள் கதவை மூடிக்கொண்டு, டாக்டர் மோகனிடம் பேசி திட்டம் போடறதை ஆள் வச்சு கண்டுபிடிச்சி டேப்பும் செய்துட்டேன்.”

“விகேஷ் மேலே பழியைப் போட்டு, ஜெயிலுக்கு அனுப்பி, தன்ராஜின் சொத்தை அனுபவிக்க நினைச்சிருப்பாங்களோ!”

“இருக்கலாம்” என்றார் ரிலாக்சாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *